அருண் நெடுஞ்செழியன்
தமிழில் பசுமை மார்க்சியராக அறியப்படும் அருண் நெடுஞ்செழியன் இதுவரை ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவரது, 'மார்க்சியச் சூழலியல்’ (விடியல்) என்ற நூல்தான், பசுமை மார்க்சியத்தை நேரடியாகத் தமிழில் பேசிய முதல் நூலாக அறியப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் பெருவெள்ளத்தையொட்டி, ‘சென்னை பெருவெள்ளம்: வளர்ச்சியின் அழிவும், அழிவின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பிலான குறுநூல் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழ்ச் சூழலில் சுற்றுச்சூழல், தனிநபர் சாகசவாதம், அடையாள அரசியல், தமிழ்த் தேசிய அரசியல், இந்துத்துவ இயற்கைவாதம், சட்டவாதம், காந்தியப் பொருளாதாரம், சீர்திருத்தவாதம் எனப் பல்வேறு சீரழிந்த போக்குகளை வெளிச்சமிட்டுக் காட்டியதாக, ‘சூழலியல் அடிப்படைவாத அரசியல்’ (உயிர்) நூல் பேசியது. இயற்கையாளர்களான ஸ்டீவ் இர்வின், விட்டேகர், டேவிட் அட்டன்பரோ, ஸ்டீவ் வின்டர் போன்ற ஆளுமைகளின் நேர்காணல்களை, ‘இயற்கை அறிந்து செயல்’ (ஆதி பதிப்பகம்) நூல் தமிழின் சூழலியல் பார்வையை வேறொரு திசைக்குக் கொண்டுசென்றது. அரசியல் கட்டுரைகளை உள்ளடக்கி, ‘இந்திய பாசிசம் இன்று’ (யாப்பு பதிப்பகம்) என்ற நூல் வெளிவந்துள்ளது. சூழலியலை இயங்கியல் பார்வையில் அணுகுவதுடன், தீர்வுகளை நோக்கிய கட்டுரைகளையும் எழுதிவருகிறார். தற்போது மயிலாடுதுறையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.