‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ்கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ்கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகைச் செய்துள்ளன. ஒரு எழுத்தாளரின் சிந்தனையின் ஆழத்தையும், சமூகப் பொறுப்பையும் உணர வேண்டுமெனில், அவருடைய கட்டுரைகளையும் விமர்சனங்களையும் கவனமாக வாசிக்க வேண்டும். அவ்வகையில், ‘ஒளிரும் சொற்கள்’ என்பது கட்டுரைகள் தொகுப்பு மட்டுமன்று; அது ஒரு காலத்தின் சிந்தனைச் சாட்சியம்.
“விளிம்புநிலை மக்களைப் பற்றிய புதிய ஆய்வுகளும், அமைப்பியல் வகைப்பட்ட சிந்தனாமுறையும், பெண்ணியச் சிந்தனைகளும் என்னைப் பெரியாரிடமும் அம்பேத்கரிடமும் இட்டுச் சென்றன. சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டதாக ஓர் எண்ணம் பிறந்தது. பாட்டாளி மக்கள் பற்றி மார்க்சியமும், சூத்திரர் பற்றிய பெரியாரியமும், பெண்கள் பற்றிய பெண்ணியமும், தலித்தியத்துக்கான ஓர் அறிவுச் சொல்லாடலை நிர்மாணிக்கும் தேவையை வலியுறுத்தின.” (2025:135) எனக் கூறும் ராஜ்கௌதமன், தமிழகத் தலித்தும் தமிழ்த் தலித் இலக்கியமும், தலித் பண்பாடு, தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட தன்தொடக்கக் கால எழுத்துகள், பெரியாரின் கோபமும் ஆவேசமும் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். கலக உணர்வோடு, வெகு நிச்சயத்தோடும் தன்னம்பிக்கையோடும் பெரிய விஷயங்கள் எனப் போற்றப்பட்டவற்றை நிசாரமாகத் தூக்கி எறிய முடிந்ததற்குப் பெரியார் ஒரு முதன்மையான காரணம் என்கிறார்.
மேலும், “தலித் இயக்கங்கள் வீறுகொண்டபோது சூத்திரர்களின் சாதி மேட்டிமை முயற்சிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. பெரியார் கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறார்; ஆத்திகராயினும் நாத்திகராயினும் சூத்திரர் யாரும் தத்தம் சாதியை விட்டொழிக்கவில்லை. பெரியார் சொன்ன இந்து மதத்தையும் கடவுளையும் கோயிலையும் சாத்திரங்களையும் விட்டொழித்த பெரியாரியவாதிகளில் பலரும் தங்கள் சாதிகளை விட்டொழித்தபாடில்லை. சூத்திரர் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெரியாரின் பிராமணிய எதிர்ப்பை இன்று சூத்திரச் சாதிகள் கைவிட்டதோடு, சாதிபோற்றும் பிராமணியத்தைத் தத்தம் அரசியல் பொருளாதார இலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன” (2025:56) எனக் கூறும் ராஜ்கெளதமன் இந்தியத் தமிழகத் தலித்துகளுக்கான சாதி ஒழிப்புப் போர்த் திட்டம் என்பது அம்பேத்கரையும் அயோத்திதாசரையும்விட்டால் வேறு எந்த இசத்திலும் இருக்கவியலாது என்பதை நிதர்சனம் என்கிறார்.
வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ‘வெள்ளையானை’ நாவலில் இடம்பெற்றுள்ள காத்தவராயன் கதைமாந்தரின் போராட்டக் குணத்தை அயோத்திதாசரின் (வாலிபப் பருவம்) இளமைக்கால வாழ்வோடு பொருத்திப் பார்க்கிறார் கௌதமன். சாதி ஒழிப்புக்கு நீங்கள் முன்வைக்கும் செயல் திட்டங்களும் தீர்வுகளும் என்னென்ன? என்று சீனு தமிழ்மணி அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் ராஜ்கெளதமன்,
“கைவசம் ஒரு நாவலை எழுதுவததைத் தவிர வேறு வழியில்லை. தீர்வுகளுக்காகத் திட்டங்கள் போடுகிறோம். ஆனால், இரண்டுக்கும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. தீர்வுகளுக்காகப் போடும் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சந்தர்ப்பச் சூழலில் சில நபர்களால் வரையறுக்கப்படுகின்றன. அவை, மாறிவிட்ட இன்னொரு வரலாற்றுச் சூழலில் நொண்டி அடிக்கின்றனவே. அம்பேத்கர் பௌத்த மதமாற்றத்தைச் சொன்னார், அவருக்கு முன் அயோத்திதாசர் பிரிட்டிஷ் ராஜ விசுவாசிகளாகும்படி சொன்னார். சுயராச்சியம் கூடாதென்றார். பெரியார் சாதி மத கலப்புத் திருமணத்தை முன்வைத்தார். ரொம்ப நூற்றாண்டுகளுக்கு முன் வேள்வித் தீயில் விழுந்து புலை உடம்பின் தீட்டை அகற்றும் உபாயத்தைச் சொன்னார்கள். புரட்சி வெடித்து அரசியல் சர்வாதிகாரம் நமக்கு வந்துவிட்டால், சாதி தானாக உதிர்ந்துவிடும் என்று உள்ளூர் தோழர்கள் உறுதி சொன்னார்கள். ஆனாலும், எப்படியோ தெரியவில்லை எப்படி மாறினாலும் சாதி வேதாளம் பழையடி முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறதே. மூன்று தலைமுறைகளாகப் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதி வேறுபாடு பற்றிச் சொல்லாமல் வளர்த்தால் சரியாகிவிடும் என்று ஒரு வெள்ளைக்காரர் கூறினார் ஆனால், நம்முடைய மொழி சாதி போற்றும் மொழியாக இருக்கிறதே. இன்னொரு வெள்ளைக்காரர், ஒரு கட்டத்தில் சாதி பளுவைத் தாங்க முடியாத இம்மக்கள் திரள் நடத்தும் ரத்தக் களறியால் தீரும் என்ற யோசனையைக் கூறினார். சாதி ஒழிப்புக்காக, தலித்துகள் தங்களுடைய ரத்தத்தைச் சிந்துகிறார்களேயொழிய மற்ற யாரும் சிந்துகிற மாதிரி தெரியவில்லை. தலித்துகள் ஒன்று வியர்வை சிந்த வேண்டும் அல்லது ரத்தம் சிந்த வேண்டும். வேறு ஏதாவது சிந்தினால் மற்றவர்களுக்கு ஏனோ பிடிப்பதில்லை.
சாதி ஒழிப்புக்கு இதுவரை முன்வைத்த திட்டங்களுக்கும் தீர்வுகளுக்கும் பயன்கள் ஏதுமில்லை என்று இப்போதே சொல்லிவிட முடியாது. சொல்லுவதற்கான கால அவகாசம் இன்னும் போதாது. சாதியின் வேர்ரொம்ப ஆழமானது. அதைக் கெல்லி எறிவதற்குச் சில காலம் பிடிக்கத்தான் செய்யும். இப்போதைய சூழலில், ஜனநாயக அரசியல் அமைப்பு தந்துள்ள உத்திகளைத் திறம்படவும் சோர்ந்துபோகாமல் விடாப்பிடியாகவம் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் அவசியம்” (2025:141-142) என்று குறிப்பிடுகிறார் ராஜ்கெளதமன்.
ராஜ்கெளதமன் அவர்கள் தமிழ் இலக்கியத்தையும் சமூக வரலாற்றையும் ஒன்றோடொன்று இணைத்து வாசித்தவர். குறிப்பாக சாதி, ஆதிக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சமூக மாற்ற இயக்கங்கள் போன்றவற்றை விமர்சனரீதியில் அணுகியவர். அவருடைய எழுத்துகள் வாசகரைச் சமாதானப்படுத்துவதில்லை; மாறாகச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தூண்டுகின்றன.
‘ஒளிரும் சொற்கள்’ தொகுப்பில் 1978இல் படிகள் இதழில் கௌதமன் என்னும் பெயரில் ராஜ்கெளதமன் எழுதிய ‘சோவியத் அழகியல்’ Aesthetics And Poetics என்னும் கட்டுரை முதல், எழுத்தாளர் பாமாவின் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து 2024இல் ‘பாமா: தமிழ் இலக்கியத்தின் திசைவழி’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கிசும்புகாரன் நூலை முன்வைத்து’ என்னும் கட்டுரைவரை ‘ஒளிரும் சொற்கள்’ நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
யூரி பரபாஸ் எழுதிய கலை, இலக்கியம், அரசியல், அமைப்பியல் பற்றி கூறியவற்றை மறுக்கும் ராஜ்கெளதமன், சோவியத் அரசும் கொள்கையும், உலகில் மிக முற்போக்கான விஷயங்கள் என்ற பொய்யான கருத்தினடிப்படையில் இந்நூலின் விவாதங்கள் அமைவதை எரிச்சலுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது. தேசியம், நாட்டுப்பற்று என்ற வாதங்கள் அணுகுண்டைவிட வருங்காலங்களில் கம்யூனிசத்தின் எதிரிகளாக விளங்குமென்ற அர்த்தத்தில் பொற்ராண்ட் ரஸ்ஸல் கூறிச் சென்றதில் உண்மை இருக்கிறது. புரட்சியிலிருந்து தூரமாய்ப் போய் நிற்கிற ஒரு அரசுக்குரிய விதமாய் சோவியத் அழகியல் லட்சணம் அமைந்திருக்கிறது வெறுமனே சோஷலிச நாடு என்ற நாமம் சூட்டிக் கொண்டிருப்பதால் மட்டுமே அதற்கு மார்க்சியத்தில் ஒரு தலைமை பீடமோ, வழி நடத்தும் தகுதியோ வந்துவிடுமோ? என்ற கேள்வியை முன்வைக்கிறார். கலை இலக்கிய மொழியில் தர்க்கத்தின் ஆதிக்கம் குறைவாக இருப்பதற்கு வடமொழி அணி இலக்கண நூல் தழுவலான தண்டியலங்காரம் கூறும் உருவக மொழி மரபுதான் கலை – இலக்கியம் என்பது சாதாரணப் பேச்சிலிருந்து வித்தியாசப்பட்ட ஒருவிதமான உருவகப் பேச்சு என்று கூறிவிடலாம் என ராஜ்கௌதமன் கூறுவது பொருளுடையது.
இவ்வாறு, ‘ஒளிரும் சொற்கள்’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சாதி அடுக்குகள் எவ்வாறு பண்பாட்டிலும் இலக்கியத்திலும் பதிந்துள்ளன என்பதை அவர் ஆழமாக ஆராய்கிறார். இலக்கியம் வெறும் கலைச்செயலாக மட்டுமன்று; அது ஒரு அரசியல் செயற்பாடாகவும் இருப்பதை அவர் வலியுறுத்துகிறார்.
தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள் பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பு (1930-1959) ‘பதிப்பாளர்களுக்கான பாடநூல்’ என்னும் தலைப்பில், வள்ளலார் இராமலிங்கனாரின் எழுத்துகளைப் பதிப்பிக்கும் பணியைத் தன் வாழ்நாள் பணியாகக் கருதி உழைத்த ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்களின் பதிப்புப் பணியை, ஒரு பதிப்பாளருக்கு வேண்டிய அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, கடும் உழைப்பு, நாணயம், நேர்மை, சமூக அக்கறை, தொலைநோக்கு, அறிவியல் – அழகியல் நோக்கு முதலிய அத்தனையும் இவருக்கு இருந்தன என்று ராஜ்கெளதமன் மதிப்பிடுகிறார்; வியக்கிறார்.
இந்நூலின் முக்கிய தனிச்சிறப்பு என்னவெனில் எந்தவொரு அதிகார அமைப்பையும் தயங்காமல் விமர்சிக்கின்றன. ஆதிக்கக் கதைகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை முன்னிறுத்துகின்றன. இதனால் இந்த நூல் ஒரு சமூக அறம் நோக்கிய சிந்தனைப் பதிவாகத் திகழ்கிறது.
மேலும், ராஜ் கெளதமன் அவர்களின் எழுத்து நடை கேலியும் நையாண்டியும் என எளிமையானதாய் இருந்தாலும் அதில் உள்ள கருத்து ஆழமும் வலிமையானதுமாக உள்ளன. அவர் பயன்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள், சமூக ஆய்வுகள், இலக்கிய மேற்கோள்கள் ஆகியவை அவரது ஆராய்ச்சித் திறத்தை வெளிப்படுத்துகின்றன. வாசகர் ஒருமுறைப் படித்துவிட்டுப் புத்தகத்தை மூட முடியாது; மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தளைப்படுவர். இன்றைய இளைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, தமிழ் ஆய்வில் சமூகநீதிப் பார்வையை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு முக்கிய வழிகாட்டி. இலக்கிய விமர்சனம் எவ்வாறு சமூக அரசியலுடன் தொடர்புடையது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
‘ஒளிரும் சொற்கள்’ என்ற தலைப்பே மிகவும் பொருத்தமானது. இங்கு “ஒளிரும்” என்பது வெறும் அழகிய சொல் அன்று; அது உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் சிந்தனையைக் குறிக்கிறது. அந்த ஒளி சில நேரங்களில் கண்களைக் குத்தும்; ஆனால் அதுவே விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்நூல் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பல முன்கூட்டிய கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்துகிறது. வரலாறு யாருடையது? இலக்கியம் யாருக்காக? சமூக மாற்றம் எவ்வாறு சாத்தியம்? போன்ற கேள்விகளை முன்வைக்கிறது. இக்கேள்விகள் இன்று மிகவும் பொருத்தமானவை. தேவையானவை ஆகும்.
‘மலமும் சாதியத் தீண்டாமையும்’ (இத்தொகுப்புப் பின்னிணைப்பில் இக்கட்டுரையின் கையெழுத்துப்படி இடம்பெற்றுள்ளது) என்னும் தலைப்பிலான கட்டுரையில் ஆலன் டண்டிசு அவர்களின் Two Tales of Crow and Sparrow – A Freudian Folkloristic Essay on Caste and Unthouchability என்ற நூல் பற்றிய விமர்சனமானது, நாட்டுப்புறக் கதைகளில் வருகிற காக்கா பற்றிய பண்பாட்டு அடையாளம், வைதிக மரபில் காக்காவுக்குத் தரப்பட்டுள்ள அடையாளத்தோடு தொடர்புடையது. இனக்குழு மரபை ஓரப்பகுதிக்குத் தள்ளிய வைதிக மரபின் நோக்கு நிலையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, அம்மரபிற்கும் சாதகமான கருத்தியல் கட்டுமானத்தையே ஆலன் டண்டிசு முன்வைக்கிறார் என்பதை கௌதமன் சுட்டுகிறார். மேலும், பறவைகளில் காக்கா, பறைச்சாதிப் பறவை என்றும் பறையா என்ற சாதிப் பெயரைப் புதிய வகைச் சொல்லாக ஐரோப்பிய அகராதிகளில் இடம்பெறச் செய்த பிரெஞ்சுப் பாதிரி அபே துபாயின் மேற்கோள் துணைக்கொள்ளுதலும் தீட்டு, தீண்டாமை, இழிவு ஆகியவற்றை மலம், எச்சில், கழிவு ஆகியவற்றிலிருந்து உருவான மனப்பழக்கம் என்ற தமது ஆய்வு முடிவுற்கேற்ப மலம், எச்சில் ஆகியவற்றோடு தொடர்புடைய காகத்தை மனித – விலங்குகளின் மலம், எச்சில் ஆகியவற்றை அகற்றும் சாதி மாந்தரோடு இந்துச் சாதியத்தின் வாய் பிராமணன் என்றும் மலம் வரும் குதம் தீண்டாச் சாதியார் என்றும் டண்டிசு நாட்டுப்புறக் கதைகளிலிருந்து பொருள்கோடல் செய்வதை ராஜ்கௌதமன் விமர்சிக்கிறார்.
இந்நூலின் இரண்டாம் பதிப்பின்போது தொகுப்பாசிரியர் சந்துருமாயவன், எழுத்தாளர் பூமணி அவர்களின் ‘ரீதி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ‘நீதி’ என்றுள்ளதைத் திருத்தவேண்டும். நீ யார் என்பதைக் காட்ட ஒரு வார்த்தைபோதும் என்னும் தலைப்பிலான நேர்காணலில் அ. மாதவையா அவர்களின் பிறந்த ஆண்டு 1925 என்றுள்ளது (ப.163), அதையும் 1872 எனத் திருத்தவேண்டும்.
‘ஒளிரும் சொற்கள்’ விவாதிக்க வேண்டிய ஒரு சிந்தனைத் தளம். தமிழ் இலக்கியத்தையும் சமூக வரலாற்றையும் புதிய கோணத்தில் அணுக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு முக்கியப் பதிவு இந்நூல்.
சான்று நூல்:
சந்துரு மாயவன் – ‘ஒளிரும் சொற்கள்’ (ராஜ்கௌதமன் தொகுக்கப்படாத எழுத்துகள்), 2025, நீலம் பதிப்பகம், சென்னை 600 008.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

க. திருமூர்த்தி
உமர் ஃபாரூக்
கிருஷ்ணமூர்த்தி
ரமீஸ் பிலாலி
து. பிரபாகரன்
Be the first person to add a comment.