கவிதை

கோ. கமலக்கண்ணன் கவிதைகள்

கோ. கமலக்கண்ணன்
15 Apr 2026, 7:34 am
0

1.

குருதிப் பாதையைக்
குதித்துக் கடந்த என்மேல்
சாரலாய்த் தெளித்த சில்லிருள்
கண் வழியே கலுழ்ந்து கசிந்திடுமோ
கமலநாசியில் தும்மலாய்த் துடித்திடுமோ
வாய்வழி வன்சொலாய் வழிந்திடுமோ?
அஞ்சிப் புலன்கட்டி தலைகுனிந்து நடந்த
என் புறந்தலையை நீவத்தன்
பறந்தலையும் ஒளிவிரல்களைப் பரவவிட்டு
முடிகோதி வருடித் தந்தது நிலவொளி
நாணத்தில் கீறல் விழாத பதத்தில்

 

2.

எனக்குக் கண்ணாடி
பார்க்க விருப்பம்
என்னை நான் பார்க்க
எதற்குக் கண்ணாடி?
வேண்டும்

என்னைக் காட்டி
என்னைக் குழப்பாமல்
தன்னை மட்டும் காட்டும்
தன்னிலையாக

 

3.

வளர்ந்ததும்
புரியும் என்றார்கள்
வளர வளர
புரிதல் குறைந்தது
வளர்ந்ததும்
அமைதி வரும் என்றார்கள்

வளர வளர
அமைதி தொலைந்தது
வளர்ந்ததும்
காலம் இருக்கும் என்றார்கள்

வளர வளர
காலம் குறைந்தபடியே வந்தது
வளர்ந்ததும்
நீ சொல்லக் கேட்பார்கள்
என்றார்கள்
அதுவொரு முரண்கணம்

வளர வளர என் சொல்
கேட்க வரிசையில் நின்றார்கள்
அகத்தில் ஊறி குருதியில் தோய்ந்து
குரலை எட்ட
தயாராகத் துடித்த சொற்கள் யாவும்
வளர வளர
தளரத் தளர
குன்றியபடி வந்து
கரைந்துபோயின.

 

4.

மென்வெய்யில் வன்வெய்யில்
சிமிட்டால்
பார்த்திருந்தேன்.
கண்ணாமூச்சி பாடியது ஒரு துன்குரல்
ஆட்டத்தின் லயிப்பில்
சந்தடியின்றி நழுவியது காலம்
ஆறு நொடியில் ஆறு திங்கள் கரைந்தன.
நடுக்குற்று விலகியது
விரலால் ஆன கன்மூடி
விழிமுன் பனித்திடல்
வெள்ளைச் சொர்க்கம்
“வெய்யில் எங்கே கண்டுபிடி’ என்றது
நடுங்கிய கிழவிக்குரல்.

 

5.

ஊழியின் இறுதிநாளில்
அனைவரின் குணத்தையும் குற்றத்தையும்
தேவர் எடைபோடுவாராம்.
அது உண்மையா பொய்யா
என்று தெரியவில்லை
ஆனால் அது நடந்தால்
ஒரு வாய்மொழித் தேர்வைப் போலத்தான்
இருக்குமென ஊகிக்கிறேன்.

பதறிக்கொண்டே வரிசையில் உக்கார வேண்டும்
என்று என்ன அவசியம்?
என்முறை வரும்வரை
மகிழ்ந்தபடியே உக்காருவேன்.

உள்ளே போனதும்
அவர் கேட்கும் கேள்விகளுக்கு
நிதானமாகப் பதில் சொல்வேன்
முடிந்தவரை சரியாகச்
சொல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

ஓரிரு பொய் சொல்ல நேர்ந்தால்
ஆசனவாயை இறுக்கிக்கொண்டு
முகத்தை இயல்பாக வைத்தபடி சொல்வேன்

அது அவருக்கு உண்மைபோலத் தோன்றக்கூடும்
ஒருவேளைக் கண்டு பிடித்துவிட்டாலும்
என் குசும்பை எண்ணி
அவர் சிரித்து இளகுவார்
தேர்வாளரைப் பதற்றப்படாமல் வைத்தாலே
நமக்கு நல்ல மதிப்பெண் வரும்
ஆனால் வாய்மொழித் தேர்வுக்கும் இதற்கும்
ஒரேயொரு வேறுபாடு
முன்னால் சென்றவர்கள் திரும்பி வந்ததும்
அவர்களிடம் தேர்வாளர் கேட்ட கேள்விகளை ரகசியக்குரலில்
கேட்டறியமுடியாது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கோ. கமலக்கண்ணன்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. கமல்க்கண்ணன் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘மழைவில்’ எனும் முதல் நாவல் நல்ல வாசகக் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. நூல் பட்டியல் சிறுகதைத் தொகுப்புகள் மீள்வருகை அபத்தமானவனின் கனவு மொழியாக்கங்கள் நாடகங்கள் ஹேம்லட் | வில்லியம் ஷேக்ஸ்பியர் மெக்பெத் | வில்லியம் ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜூலியட் | வில்லியம் ஷேக்ஸ்பியர் திரைக்கதை கூண்டுப் பறவைகள் | மைக்கேல் ஹனகே புதினங்கள் சோர்பா என்ற கிரேக்கன் | நீகாஸ் கசந்த்சாகீஸ் ஷோஷா | ஐசக் பாஷவிஸ் சிங்கர் எலிவளை வாழ்க்கை | ஜான் ஸ்டெயின்பெக் சித்தார்த்தன் | ஹெர்மன் ஹெஸ்ஸே ஒரு மரணதண்டனைக் கைதியின் இறுதி நாள் | விக்டர் ஹியுகோ மாளாக் காதல் | லேவ் தல்ஸ்தோய் தீர்க்கதரிசி | கலீல் ஜிப்ரான் | உரைநடைக் கவிதை முறிந்த சிறகுகள் | கலீல் ஜிப்ரான்








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

சாகுல் ஹமீதுஆய்வுநிலமெங்கும் பூத்த முகம்சாய் வைஷ்ணவிநாளையும் நாளையேஇலக்கிய நிகழ்வுகள்நுண்கதைநான் ஏன் பதிப்பிக்கிறேன்ம.கேசவன்நானென்பது லெட்டூஸ்வேறொரு மழைபிப்ரவரி தினம்தொ.பத்தினாதன்கோ கமலக்கண்ணன் கவிதைகள்சீர்மை இதழ்அநித்யம்குறுங்கதைகவிதைகள்நேர்காணல்மழைவில்இலக்கிய விமர்சனம்அக்காக்கள்சதுக்கம்கஸல்ஏ ஜி கௌதம்காஃப்காவின் காதுகள்இலக்கியம்மண்வாசனை கதைகள்சிறுகதைகருத்தரங்குகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!