1.
குருதிப் பாதையைக்
குதித்துக் கடந்த என்மேல்
சாரலாய்த் தெளித்த சில்லிருள்
கண் வழியே கலுழ்ந்து கசிந்திடுமோ
கமலநாசியில் தும்மலாய்த் துடித்திடுமோ
வாய்வழி வன்சொலாய் வழிந்திடுமோ?
அஞ்சிப் புலன்கட்டி தலைகுனிந்து நடந்த
என் புறந்தலையை நீவத்தன்
பறந்தலையும் ஒளிவிரல்களைப் பரவவிட்டு
முடிகோதி வருடித் தந்தது நிலவொளி
நாணத்தில் கீறல் விழாத பதத்தில்
2.
எனக்குக் கண்ணாடி
பார்க்க விருப்பம்
என்னை நான் பார்க்க
எதற்குக் கண்ணாடி?
வேண்டும்
என்னைக் காட்டி
என்னைக் குழப்பாமல்
தன்னை மட்டும் காட்டும்
தன்னிலையாக
3.
வளர்ந்ததும்
புரியும் என்றார்கள்
வளர வளர
புரிதல் குறைந்தது
வளர்ந்ததும்
அமைதி வரும் என்றார்கள்
வளர வளர
அமைதி தொலைந்தது
வளர்ந்ததும்
காலம் இருக்கும் என்றார்கள்
வளர வளர
காலம் குறைந்தபடியே வந்தது
வளர்ந்ததும்
நீ சொல்லக் கேட்பார்கள்
என்றார்கள்
அதுவொரு முரண்கணம்
வளர வளர என் சொல்
கேட்க வரிசையில் நின்றார்கள்
அகத்தில் ஊறி குருதியில் தோய்ந்து
குரலை எட்ட
தயாராகத் துடித்த சொற்கள் யாவும்
வளர வளர
தளரத் தளர
குன்றியபடி வந்து
கரைந்துபோயின.
4.
மென்வெய்யில் வன்வெய்யில்
சிமிட்டால்
பார்த்திருந்தேன்.
கண்ணாமூச்சி பாடியது ஒரு துன்குரல்
ஆட்டத்தின் லயிப்பில்
சந்தடியின்றி நழுவியது காலம்
ஆறு நொடியில் ஆறு திங்கள் கரைந்தன.
நடுக்குற்று விலகியது
விரலால் ஆன கன்மூடி
விழிமுன் பனித்திடல்
வெள்ளைச் சொர்க்கம்
“வெய்யில் எங்கே கண்டுபிடி’ என்றது
நடுங்கிய கிழவிக்குரல்.
5.
ஊழியின் இறுதிநாளில்
அனைவரின் குணத்தையும் குற்றத்தையும்
தேவர் எடைபோடுவாராம்.
அது உண்மையா பொய்யா
என்று தெரியவில்லை
ஆனால் அது நடந்தால்
ஒரு வாய்மொழித் தேர்வைப் போலத்தான்
இருக்குமென ஊகிக்கிறேன்.
பதறிக்கொண்டே வரிசையில் உக்கார வேண்டும்
என்று என்ன அவசியம்?
என்முறை வரும்வரை
மகிழ்ந்தபடியே உக்காருவேன்.
உள்ளே போனதும்
அவர் கேட்கும் கேள்விகளுக்கு
நிதானமாகப் பதில் சொல்வேன்
முடிந்தவரை சரியாகச்
சொல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஓரிரு பொய் சொல்ல நேர்ந்தால்
ஆசனவாயை இறுக்கிக்கொண்டு
முகத்தை இயல்பாக வைத்தபடி சொல்வேன்
அது அவருக்கு உண்மைபோலத் தோன்றக்கூடும்
ஒருவேளைக் கண்டு பிடித்துவிட்டாலும்
என் குசும்பை எண்ணி
அவர் சிரித்து இளகுவார்
தேர்வாளரைப் பதற்றப்படாமல் வைத்தாலே
நமக்கு நல்ல மதிப்பெண் வரும்
ஆனால் வாய்மொழித் தேர்வுக்கும் இதற்கும்
ஒரேயொரு வேறுபாடு
முன்னால் சென்றவர்கள் திரும்பி வந்ததும்
அவர்களிடம் தேர்வாளர் கேட்ட கேள்விகளை ரகசியக்குரலில்
கேட்டறியமுடியாது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

கோ. கமலக்கண்ணன்
சாய் வைஷ்ணவி
பெரு. விஷ்ணுகுமார்
சீவகன்
ரமீஸ் பிலாலி
கிருஷ்ணமூர்த்தி
து. பிரபாகரன்
Be the first person to add a comment.