கவிதை

சாய் வைஷ்ணவி கவிதைகள்

சாய் வைஷ்ணவி
15 Apr 2026, 7:34 am
0

1. ஒரு துளி கருணை

எல்லோரிடமும் உண்டு ஒரு பிச்சைப் பாத்திரம்
கோரிக்கைகளோடு கையேந்தும் தட்டில்
எப்போதாவது விழும்
நம்பிக்கைகளின் நாணயங்கள்
அவனுக்காக
இவளுக்காக
எவளுக்காகவோ
வேண்டும் குரல் எவ்வளவு இளகுவானதோ
அவ்வளவு கருணை உங்களுக்கு
கடலளவு கருணை கொண்ட ஒருவனிடம்
துளியளவு கண்ணீரைப் பெற்றுக்கொண்ட
ஒருத்தியைக் கண்டேன்
பல மாதங்களுக்குப் பிறகு எங்கள் ஊரில்
பெருமழை பெய்தது நேற்று
வற்றிய மாரில் பாலூறுதலை
ஒத்திருந்தது அது

 

2. வேறொரு மழை


துணையெழுத்தைப் போலவே
அவனோடு உடன்பட்டு
விரல் கோர்த்து வலம் வந்த நாளில்
பெரும் மழை வந்தது
நிரம்ப அரிசி தின்றவளென்று வாழ்த்திச்
சிரித்துக்கொண்டே சென்றவர்களை
மீண்டும் பார்த்த நாளில்
அவர்கள் கண்களால்
மழை பெய்துகொண்டிருந்தனர்
அந்நேரம்
அவன் சாலையில் சிந்தியிருந்த செந்நீர்த்துளிகளை
வேகவேகமாக
மறைத்துக்கொண்டிருந்தது
வேறொரு மழை

 

3. பழைய புதையல்

சீட்டியடித்து வரும் மாநகராட்சி வாகனத்தில்
அசைந்தசைந்து வருகின்றன
ஊர்க் கழிவுகள்
மூட்டையோடு நிதானித்து எழுந்திடும்
அவன் கண்களுக்கு மட்டும்
அவை பழைய புதையல்கள்

 

 4. மருத்தவருக்காகக் காத்திருத்தல்

அநேக மதியம்
வயிற்றுப்பல்லி கொக்கரிக்கத் தொடங்கியிருந்தது
எனக்கென்றில்லை
அருகிலிருப்பவளின் பல்லி சத்தமும்
கூடிக்கொண்டது
காலாதி காலாமாக
பூதம் காத்த புதையலிருந்த
கைப்பைக்குள் கையை விட்டுத் துலாவினேன்
என்றோ வைத்த கைக்குட்டை
எப்போதோ பிரித்து வைத்த டைரி மில்க் தாள்
கருகிப்போன வாழைப்பழத் தோல்
இரண்டு மூடியில்லாத பேனா
ஆபத்திற்கென்றிருந்த நாப்கின்
பயனற்றுக் கிடந்த பணப்பரிமாற்றத் தாள்கள்
சில விபூதி குங்குமப் பொட்டலங்கள்
பல் குத்தும் குச்சிகள்
பக்குவப்படாத தோள்பைக்கு
எப்படிப் புரிய வைப்பேன் என் பசியை?
பூட்டியிருந்த மருத்துவர் அறைக்கு
வெளியில் காத்திருக்கின்றன அறிவிக்கப்படாத பசிகள்

வெள்ளை உடை தேவதை
அவளது வீட்டில்
சல்லாபித்திருக்கலாம்
அவளது கடிகாரம் உறைந்திருக்கலாம்
சோறு வேகாமல் போக்குக்காட்டலாம்
பூனை குறுக்கில் சென்றிருக்கலாம்
அவளது தாமதத்தை யாரும்
அவளுக்கு அறிவிக்காமல் இருந்திருக்கலாம்
பூட்டியிருக்கும் மருத்துவர் அறைக்கு வெளியில் காத்திருக்கும்
மதியநேரத்துப் பசிகளைப் பற்றி அவள்
கேள்விப்படாமல் இருந்திருக்கலாம்
அவளது பாதைகளில் உதிர்ந்திருக்கும்
காய்ந்த ரோஜா சாயலில்
இதழ்கள் வறண்டு கொண்டிருப்பதை
எப்படிச் சொல்வோம் அவளிடம்?
அவ்வப்போது கடக்கும் செவிலியரிடமிருந்து
உதிரும் ஒன்றிரண்டு புன்னகைகளைக் கொண்டு
எவ்வளவு நேரம்தான்
சமாதானம் செய்வேன்
இந்த மதிய நேரத்துப் பசியை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

ஏ ஜி கௌதம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்விமர்சனம்நானென்பது லெட்டூஸ்நாளையும் நாளையேநவீனத்துவம்கஸல்கருத்தரங்கங்கள்வாசகர் கூட்டம்காஃப்காவின் காதுகள்தலையங்கம்ஒரு துளி கருணைபிப்ரவரி தினம்எழுத்தாளரின் மரணம்தலித் வரலாறுசீர்மை இதழ்சுஜித் லெனின்புதிய வருகைகாலச்சுவடுஇலக்கிய விமர்சனம்சிறுகதைத் தொகுதிகுறுங்கதைஎஸ் அற்புதராஜ்ம.கேசவன்ராஜ் கௌதமன்கவிதைகள்அலர் பதிப்பகம்அக்காக்கள்சாய் வைஷ்ணவிபின்னவீனத்துவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!