தன்னிறை
தன்னைத் தின்று
செரிக்க முடியாமல்
தவளையை விழுங்கிய
தண்ணீர் பாம்பெனத்
தவித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் இருப்பின் மீது
விழுந்த கேள்விகள்
அவன் முன்
ஆடை கலைய
ஆடிக் கொண்டிருக்கின்றன.
மனதின் ஆழத்தில்
விழுந்து அமுக்கிக் கொண்டிருக்கும்
குப்பைகளின் வீச்சம்
அவன் நடமாட்டத்தை
நமநமக்கச் செய்து கொண்டிருக்கிறது.
இன்னும் இன்னுமென
உள்ளிறங்கும்
கூரூசியை ஒத்த
வார்த்தைகள்
தன்னைத் தின்று கொண்டிருப்பதை
உற்றுப் பார்த்தவன்
தன்னைத் தானே தின்பதை
நிறுத்தி
நிறைவு கொண்டாள்.
மியாவ்
என் நெடுந்தனிமையை
ஒரு ‘மியாவ்’ தின்றுவிட்டு
என் காலடியில் கிடக்கிறது.
மனதின் ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
கேள்விகள்
மெல்ல மேலெழும்பும்போது
ஒரு ‘மியாவ்’ பதிலாகி
மனதின் சலனங்களை
அனந்த சயனம்
கொள்ளச் செய்கின்றன.
வழித்தடம் மாற வைக்கும்
வார்த்தைகளை அறுக்கும்
ஒற்றை ஆயுதமாய்
ஒரு ‘மியாவ்’
தொடும் போதெல்லாம்
மனசுக்குள் பரவும் மென்மை
காதுமடல் மலர்த்தும் ’மியாவ்’
பசித்த பொழுதொன்றில்
என் பிரிய
அணில் பிள்ளையைக்
காலுக்கடியில் அமுக்கிக்
கடித்துத் தின்ற நாளிலிருந்து
‘மியாவ்’ மறைந்து
அணில் பிள்ளையின்
கடைசி ‘கீச்சொலி’
இமைகளுக்கு
நடுவில் நின்று
அதிர்கிறது.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

அதங்கோடு அனிஷ்குமார்
ரமீஸ் பிலாலி
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
கண்ணன்
பெருமாள் முருகன்
Be the first person to add a comment.