கவிதை இலக்கியம்

கண்ணன் விஸ்வகாந்தி கவிதைகள்

கண்ணன் விஸ்வகாந்தி
02 Sep 2026
0

மேசையில் அங்குமிங்கும் ஓடிய
அருவெறுப்பான கரப்பானை
ஒரு பூவைப் போல 
வலிக்காமல் 
கீழே தள்ளினார் எதிர் சீட்டுக்காரர் 
அனிச்சையாக நசுக்க எழுந்த 
பூட்ஸ் கால்கள் 
தானாக பின்வாங்கின
அன்பும் கொட்டாவியைப் போல 
ஒரு தொற்று வியாதிதானே

***

வளைந்து நெளிந்து செல்கிறது 
காலடியில் நீர்ப்பாம்பு 
குழந்தையின் சிறுநீர்

***

இருட்டறையில் தனியே 
இருந்தவரிடம் கேட்டேன்: "இங்கு அமரலாமா?"
"இயலாது. நான் முன்பு தனியறையில் அமர்ந்திருந்தவள்"
அவ்வளவு பெரிய அறையில் 
தனியாக இருக்குமவரைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு 
கதவை அறைந்து சாத்திவிட்டு
நிகழ்காலத்திற்கு விரைந்து வந்தேன்

***

அவர்கள் எல்லாவற்றையும் துடைத்துவிட்டு
மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறார்கள்
யாருமே நடக்காத 
புதிய பாதையில் நடக்கிறார்கள் 
தலைக்கனமின்றித் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறார்கள்
தனது அழுக்குகளை 
எப்போதும் மறைப்பதில்லை
தனக்குத் தெரிந்ததைத் தயங்காமல் அள்ளித் தருகிறார்கள்
பனித்துளியையும் புதுப்பூவையையும்
ஒரு குழந்தையைப் போலப் பார்க்கிறார்கள் 
கற்றுக் கொள்கிறார்கள் 
சாகா வரம் பெற்றவர்களைப் போல
இவ்வுலகை அவ்வளவு நேசிக்கிறார்கள்
கடைசியில் 
கைப்பிடித்து ஆறுதலலிக்கவும் 
ஆளின்றி 
அனாதையாகச் 
செத்துப் போகிறார்கள்.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கண்ணன் விஸ்வகாந்தி

வசிப்பது சேலம், தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் கவிதைகள் வெளியாகி உள்ளது. இதுவரை கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை', 'அதீதத்தின் பசி' என்று மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 'கறுப்பு வட்டமடித்த இரும்புக் கதவுகள்,' 'தாழ்வரை' என ஒரு சிறுகதைத் தொகுப்பும் நாவலும் வெளியாகியுள்ளன. மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'அதீதத்தின் பசி' நூலுக்கு இந்த ஆண்டின் சௌமா விருது பெறுகிறார்








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

இலக்கிய அறிமுகம்அதிகாரம்ழ என்ற பாதையில் நடப்பவன்ரூமி‘மெல்லிய கோடுகள்இலக்கிய விமர்சனம்நிலமெங்கும் பூத்த முகம்பிப்ரவரி தினம்தாரகன்புதிய வருகைவைத்தியம்காஃப்காவின் காதுகள்சீர்மை இதழ்பிம்ப அரசியல்கிராமியம்நானென்பது லெட்டூஸ்கருத்தரங்குகள்பேட்டிஒளிரும் சொற்கள்நறுங்கதைநுண்கதைபதிப்புத் துறைஅப்பாவின் குழிஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்இலக்கிய நிகழ்வுகள்சாகுல் ஹமீதுரோலாண்ட் பார்த்விஜய்காலச்சுவடுடோனி பிரஸ்லர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!